தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து, இரண்டு நாட்களில் முடிவெடுக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நிபுணர்கள், கல்வியாளர்களின் கருத்தை கேட்டு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கருத்தில் கொண்டு, சி.பி.எஸ்.இ., 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, மத்திய அரசு நேற்று அறிவித்தது. கொரோனா சூழலில் மாணவர்கள் நலன் கருதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்புக்குப் பிறகே, தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே தெரிவித்த நிலையில், நேற்று, சி.பி.எஸ்.இ. தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று, தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

12ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதா, வேண்டாமா என, கல்வியாளர்கள், மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். கல்வியாளர்கள் , மருத்துவ வல்லுனர்கள் உடன் இரண்டு நாட்களில் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும். 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதில், மாணவ – மாணவிகளிடையே இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.

மாணவர்களின் பாதுகாப்பு , உடல்நலன் முக்கியம் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியம் என்பதால் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டிய சூழல் உள்ளது. நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.