பள்ளிகள் மூலம் வேலை வாய்ப்பு பதிவு இனி கிடையாது ! வேலைவாய்ப்பு இணையதளத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சியை, மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகிறது என அறிவிப்பு!!!.


       தமிழகத்தில் பள்ளிகளில் பயின்று பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் மூலம் வேலைவாய்ப்பு பதிவுகள் செய்யும் வழக்கம் கடந்த பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து. தற்போது வேலை வாய்ப்பு பதிவுகள் பள்ளிகளில் இனி பதிவு செய்யப்பட மாட்டாது என வேலைவாய்ப்பு துறை அறிவித்துள்ளது.

    முன்னதாக பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் வாங்கும்போது மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் இனி வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஆன்லைனில் (www.tnvelaivaippu.gov.in) பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது...



"வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, வேலைவாய்ப்பு பிரிவு இணையதளத்தின் வாயிலாக 2011 ஆம் ஆண்டு முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக அவரவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செயலாளர் -3 அவர்களால் 6.6.2022 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்ட முடிவில் தெரிவிக்கப்பட்டபடி நிகழ்நிலையாக
வேலைவாய்ப்பு இணையதளத்தில் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகிறது.

     மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை வேலைவாய்ப்பு இணைய தளமான "www.tnvelaivaaippu.gov.in" நிகழ்நிலையாக தரும் மனுதாரர்களுக்கு பதிவுகள் மேற்கொண்டு பதிவட்டை வழங்கப்பட வேண்டும். மேலும் அனைவரும் பதிவுகள் மேற்கொள்ளும் வசதி உள்ளதால் அதில் நேரடியாக மாணவர்கள் பதிவுகள் செய்து கொள்ளலாம் என்பதையும் வேலைவாய்ப்பு பதிவுகள், கூடுதல் பதிவுகள் மற்றும் புதுப்பித்தல்களை இ சேவை" வாயிலாக செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என்பதால் அவ்வசதியினையும் விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்திகொள்ளலாம் என்ற விவரங்களை அனைவரும் அறியச் செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க சார்நிலை அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."